வாகனங்களில் பாதுகாப்பிற்காகப் பொருத்தப்பட்ட காற்றுப் பைகளில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்து தருவதற்காக உலகம் முழுவதும் 50 இலட்சம் கார்கள் திரும்பப் பெறப்படவுள்ளன.
கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் தயாரித்து, வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு விநியோகித்த காற்றுப் பைகளில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் தயாரித்து விநியோகித்த காற்றுப்பை கட்டுப்பாட்டு கணனியில் ஈரப்பதம் உட்புக வாய்ப்பிருப்பதாலும் இதன் காரணமாக காற்றுப்பை விரியாமல் ஓட்டுநருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாலும், அவை பொருத்தப்பட்டுள்ள கார்களை திரும்பப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கான்டினென்டல் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு அளித்த ஆவணங்கள், தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்து வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதே பிரச்சினைக்காக, ஹோண்டா, ஃபியட் கிரைஸ்லர், வோக்ஸ்வேகன் மற்றும் மெர்ஸிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.
அமெரிக்காவில் மட்டும் சுமார் 20 இலட்சம் வாகனங்கள் இத்தகைய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கான்டினென்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.