எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனை திறைசேரியின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கும் இந்த நடவடிக்கை நாணயமாற்று விகிதம், அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் பணவீக்கம் என்பவற்றில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய வங்கி கைத்தொழில் அமைச்சு மற்றும் திறைசேரி என்பன கட்டுப்பாடுகள் நீக்கப்படும் பொருட்களின் அளவினைத் தீர்மானிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட பொருட்கள் கறுப்புச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் கணினிகள், மொபைல் போன்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், எழுதுபொருட்கள், உணவுப் பொருட்கள்,ஆடை உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மற்றும் ஆடைகள், தோல் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள்,மற்றும் மருத்துவ உபகரணங்கள், உதிரி பாகங்கள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், விவசாய உபகரணங்கள், குளியலறை பொருத்துதல்கள் மற்றும் பீங்கான் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள், டைல்ஸ் என 100 முதல் 150 பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த நான்கு மாதங்களுக்குள் நீக்கப்படும்.
எனினும் வாகனங்களின் இறக்குமதி உடனடியாக அனுமதிக்கப்படாது இது இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என திறைசேரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Reviewed by Admin
on
March 27, 2023
Rating:

No comments: