சமூகத்தினதும், நாட்டினதும் நலன் கருதி ரிசாட் பதியுதீன் ஜனாதிபதியுடன் இணைய வேண்டும் - முஷாரப் எம்.பி அழைப்பு
(எஸ்.எம்.அறூஸ்)
சமூகத்தினதும், நாட்டினதும் நன்மை கருதி மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுன் இணைந்து கொள்ள முன்வர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் மேற்கண்டவாறு ரிசாத் பதியுதீனுக்கு அழைப்பினை விடுத்துள்ளார்.
அந்த அழைப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நமது சமூகமும், நாடும் எதிர்பார்க்கும் நேசத்தின் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் காணப்படுகின்றார்.
விரும்பியோ, விரும்பாமலோ முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித் தலைவரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இவ்வாறான நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதியை ஆதரிக்கும் முடிவை எடுத்து அவருடன் இணைந்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தைப் போல் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் இணைந்து செயற்படுவதும் சமூகத்திற்கு பெரும் பாதிப்பாகும். இதனை நாம் அனுபவத்திருக்கின்றோம். இனவாதமில்லாத ஒரு தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எல்லோராலும் மதிக்கப்படுகின்றார்.
சமூகம் பாதிக்கப்பட்டு தனிப்பட்ட நபர்கள் நன்மையடையும் தீர்மானத்தை ரிசாட் பதியுதீனும் மக்கள் காங்கிரஸ் கட்சியும் எடுக்கக் கூடாது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இருண்ட யுகத்தை மாற்றி நாட்டை பொருளாதார ரீதியில் வலுவான நிலைக்குக் கொண்டு வந்துள்ளார்.
அது மட்டுமல்ல பிராந்தியங்களின் அபிலிருத்திக்காக எதிர்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் நிதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்துள்ளமை மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும்.
இவ்வாறு நாட்டை மீட்ட தலைவருக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமையாகும். காலத்தை நாம் கடக்க முடியாது. காலம் நம்மைக் கடந்து விடும். அதனால் ரிசாட் பதியுதீன் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் தீர்மானத்தை விரைவாக எடுத்து அவருடன் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இன, மத, மொழி, கட்சி வேறுபாடுகளை கடந்து ஒரே தேசமாக நாட்டை வெற்றி கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக வெற்றியடையச் செய்ய எல்லோரும் களத்தில் இறங்கி பணியாற்றுவோம் என அந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: