எமது கட்சி சிலவேளை வெற்றி பெறாவிட்டால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேசிய பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு நிச்சயம் கிடைக்கும் என தலைவர் பிள்ளையான் உறுதியாக கூறியுள்ளார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் அற்புதலிங்கம் விஸ்கரன் தெரிவித்தார்.
அம்பாறை ஊடக அமையத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் முதல் முதலாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியில் காரைதீவிலிருந்து போட்டியிடுகின்றேன். எனது தலைவர் பிள்ளையான் மட்டக்களப்பில் செய்த அபிவிருத்திகள் பற்றி அனைவரும் அறிவார்கள். அதேபோல் அம்பாறையிலும் அதனை செய்ய வேண்டும் என்று நாம் நம்புகின்றோம். அதற்காகவே வெற்றி பெறும் அணியில் இறங்கி இருக்கின்றோம். கடந்த காலங்களில் எம் மத்தியில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். யாருமே எதுவும் செய்யவில்லை.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்னும் ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியவில்லை. திருக்கோவில் இல்மனைற் அகழ்வு மற்றும் வீரமுனை வரவேற்பு வளையி என்று பட்டியல் தொடர்கிறது.
ஆனால் இம் முறையும் வெள்ளை வேட்டி வெள்ளை சேர்ட் போட்டுக்கொண்டு தேசியம் பேசி ஏமாற்ற வருவார்கள். தேசியம் என்பதே கிடையாது. அது ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை. ஏமாற வேண்டாம் மக்களே அவர்களுள் ஒற்றுமை இல்லை. பிரிந்து சின்னாபின்னமாகி உள்ளனர். ஆளுக்கொரு சின்னம்.நான் ஒரு விளையாட்டு வீரன். வெற்றி பெறுவோம் என்று ஆடுகளத்தில் இறங்குவோம். நாங்கள் வெற்றி பெற்று வருகின்ற அரசாங்கத்தில் இணைந்து அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்க இருக்கின்றோம்.
சில வேளை எமது கட்சி அம்பாறை மாவட்டத்தில் வெற்றி பெறாவிட்டால் இங்கு எமக்கு கிடைக்கும் தேசிய பட்டியல் ஆசனத்தை இங்கு தருவதாக எமது தலைவர் வாக்குறுதி அளித்து இருக்கின்றார். இப்படி யாரும் இதுவரை வாக்குறுதி அளிக்கவில்லை. கடந்த முறை இங்கே ஆசனம் பறிபோகும் என்பதற்காகவே நாங்கள் போட்டியிடவில்லை. ஆனால் இம்முறை நிச்சயம் ஆசனம் கிடைக்கும் என்பதால் இம்முறை முதன்முதலாக களம் இறங்கி இருக்கின்றோம். மக்களே உணர்ந்து சிந்தியுங்கள். வாக்களியுங்கள் என தெரிவித்தார்.
Reviewed by Admin
on
October 15, 2024
Rating:

No comments: