உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
248 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இதன் போது கட்டுப்பணமும் வேட்புமனுவும் பொறுப்பேற்கப்படும். கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு பெறுகிறது.
வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணி எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவுபெறும்.
இதன் கீழ் 17 மாநகர சபைகளுக்கும், 23 நகர சபைகளுக்கும், 208 பிரதேச சபைகளுக்குமாக இரண்டாம் கட்ட தேர்தல் பணிகள் இடம்பெறுகின்றன.
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான முதலாம் கட்டப் பணியின் கீழ் கட்டுப்பணம் செலுத்துதல், வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணி கடந்த வியாழக்கிழமை நண்பகல் 1.2.00 மணியுடன் நிறைவு பெற்றது. 21 மாவட்டங்களில் 93 உள்ளுராட்சி மன்றங்களுக்காக இதன் போது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 7 மாநகர சபைகள், 18 நகர சபைகள், 68 பிரதேச சபைகளுக்காக முதல் கட்டப் பணிகள் இதன் கீழ் இடம்பெற்றன. 30 அரசியல் கட்சிகளும், 49 சுயேச்சைக் குழுக்களும் முதல் கட்டத்திற்காக வேட்புமனுக்களை கையளித்தன.
வேட்புமனுக்கள் பொறுப்பேற்கப்பட்ட பின்னர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தேர்தல் நடைபெறும் திகதியை அறிவிப்பார். வேட்புமனுக்களை ஏற்கும்பணிகள் இரண்டு கட்டத்தில் இடம்பெற்ற போதும் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒரே தினத்திலேயே இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார் எள்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் - வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி நாளை ஆரம்பம்
Reviewed by Admin
on
December 17, 2017
Rating:
Reviewed by Admin
on
December 17, 2017
Rating:

No comments: