வெகு நேரமாகியும் சுரேஷ்குமார் அறையில் இருந்து வெளியே வரவில்லை. உறவினர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த காளிதாஸ் மகன் 30 வயது சுரேஷ் குமார். பல்வேறு ஊர்களுக்குச் சென்று வீடுகள், நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியைச் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவருக்கும் குடும்பத்தினர் சம்மதத்துடன் நேற்று முன்தினம் காலை ஏழு மணிக்கு முருகன் கோவிலில் திருமணம் நடந்தது.
அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்து பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் அங்குள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்கி இருந்தனர்.
அனைவரும் பேசிக் கொண்டிருந்த போது மணமகன் சுரேஷ்குமார் உடை மாற்றிக் கொண்டு வருவதாக அறைக்குள் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சுரேஷ்குமார் அறையில் இருந்து வெளியே வரவில்லை.
உறவினர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே சுரேஷ்குமாரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்குமாரின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்தன்றே மணமகன் இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Reviewed by Admin
on
November 14, 2022
Rating:

No comments: