அம்பாறை கரையோர பிரதேச கடலரிப்பு தொடர்பில் ஹரிஸ் எம்.பி கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளரிடையே சந்திப்பு !
நூருல் ஹுதா உமர்
நாட்டின் அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடல்கொந்தளிப்பினால் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்கள் கடலரிப்புக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதுதொடர்பில் துரித நடவடிக்கை எடுத்து கரையோரத்தை பாதுகாக்கும் அவசியம் தொடர்பில் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸுக்கிடையிலான சந்திப்பு இன்று கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தில் இடம்பெற்றது.
இதன்போது அம்பாறை மாவட்ட நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை போன்ற பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் காணொளி மற்றும் புகைப்படங்களை கொண்டு திணைக்கள பணிப்பாளருக்கு விளக்கிய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ், நிந்தவூர் வீதிகள் மற்றும் நிந்தவூரின் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ள விடயங்கள், காரைதீவு இந்து மயானம் பாதிக்கப்பட்டுள்ளமை, மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி கடலுக்கு இறையாகியுள்ளமை, சாய்ந்தமருது பௌஸி மைதானம் கடலரிப்பில் காவுகொள்ளப்பட்டமை, மருதமுனை கோபுரம் சரிந்துவிழும் ஆபத்தில் உள்ளமை தொடர்பில் முழுமையாக விளக்கினார்.
நிலைமைகளை கேட்டறிந்த கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் இதுதொடர்பில் மேற்கொண்டு அவசர நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினருக்கு உறுதியளித்துள்ளதாக ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
Reviewed by Admin
on
December 09, 2022
Rating:

No comments: