நூருல் ஹுதா உமர்
இலங்கையின் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட சம்மாந்துறை பிரதேச சபை நகர சபையாக தரமுயர்த்தப்பட சகல தகுதிகளும் இருப்பதனால் சம்மாந்துறையை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்த உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோளொன்றை பிரதமருக்கு விடுத்துள்ளார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் (08) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்துகொண்டு இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார்.
இக்கூட்டத்தில் நாட்டின் பல பிரதேச சபைகளை நகரசபைகளாக தரமுயர்த்துவது தொடர்பில் விவாதிக்கப்பட்டது. வடக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பிரதேச சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்த எடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தில் அம்பாறையில் உள்ள பழம்பெரும் நகரமான சம்மாந்துறை, பிரதேச சபையாக இருந்து வருவதுடன் நகரசபையாக தரமுயர்த்த சகல தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளது இதனால் சம்மாந்துறையை நகரசபையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஹரீஸ் எம்.பி முன்வைத்த கோரிக்கையை ஏற்ற பிரதமர் அதுதொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதேநேரம் உள்நாட்டலுவல்கள் சம்பந்தமாகவும், பிரதேச செயலக சர்ச்சைகள் சம்பந்தமாகவும் பிரதமர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இதன்போது விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னெ, மேலதிக செயலாளர் எம். நயீமுடீன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Admin
on
November 09, 2022
Rating:

No comments: