அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பாக அதிகபட்சமாக பிரின்ஸ் மஸ்வாரே 74 ஓட்டங்களை பெற்றார்.
அயர்லாந்து சார்பில் பாரி மெக்கார்த்தி, ஆண்டி மெக்பிரைன் தலா 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பாக அதிகபட்சமாக மூர் 79 ஓட்டங்களை பெற்றார்.
ஜிம்பாப்வே சார்பில் முசராபானி, தனகா சிவாங்கா தலா 3 விக்கெட்டும், சடாரா, சீன் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
40 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த ஜிம்பாப்வே சகல விக்கெட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களை பெற்றது.
அதிகபட்சமாக டியான் மீயர்ஸ் அரை சதம் கடந்து 57 ஓட்டங்களையும், சீன் வில்லியம்ஸ் 40 ஓட்டங்களை பெற்றார்.
அயர்லாந்து சார்பில் ஆண்டி மெக்பிரைன் 4 விக்கெட்டும், மார்க் அடைர், கிரெய்க் யங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. 3 ஆவது நாள் முடிவில் அயர்லாந்து 33 ஓட்டங்கள் 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
இந்நிலையில், நேற்று (28) 4 ஆவது நாள் ஆட்டம் நடைபெற்றது. லோர்கன் டக்கர், ஆண்டி மெக்பிரின் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதமடித்தனர்.
6 ஆவது விக்கெட்டுக்கு 96 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் டக்கர் 56 ஓட்டங்களில் அவுட்டானார்.
இறுதியில், அயர்லாந்து அணி 6 விக்கெட்டுக்கு 158 ஓட்டங்கள் பெற்று அபார வெற்றி பெற்றது. ஆண்டி மெக்பிரின் 55 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் அயர்லாந்து அணி சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருது ஆண்டி மெக்பிரினுக்கு வழங்கப்பட்டது.

No comments: