வடகிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடை நடைபெறுகிற போதும், அரசு கொள்வனவு விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
துரிதமாக நெல் கொள்வனவு நிர்ணய விலையை அறிவிக்குமாறு INCLUDE அமைப்பு வேண்டுகோள்.
(எஸ்.எம்.அறூஸ்)
வடகிழக்கு மாகாணங்களில் நெல் அறுவடை ஜனவரி 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தால் நெல் கொள்வனவு நிர்ணய விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது, ஒருவகையான பிராந்திய புறக்கணிப்பாகக் கருதப்படுகிறது.
INCLUDE அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குறிப்பாக அம்பாறை மாவட்ட விவசாயிகள் இதில் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். முந்தைய அரசாங்கங்களும் இதே போக்கையே பின்பற்றி விவசாயிகளுக்கு நீடித்த சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன. மாற்றம் கொண்டுவருவோம் எனக் கூறிய தற்போதைய அரசாங்கமும், அதே பழைய நடைமுறையைத் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசாங்கம் நிர்ணய விலையை அறிவிக்கத் தாமதிப்பதாலும், அரச நெல் கொள்வனவு சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படாமலும் இருப்பதால், ஆரம்பகாலத்தில் அறுவடை செய்யும் விவசாயிகள் அரிசி ஆலை மாபியாக்கள் நிர்ணயிக்கும் மிகக் குறைந்த விலைக்குத் தங்களின் நெல்லை விற்க நிர்பந்திக்கப்படுகின்றனர்.
இந்த நாட்டின் பாரம்பரிய பொருளாதார முதுகெலும்பும் விவசாயமாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில், உலகில் உணவுத் தட்டுப்பாடு நிலவும் இச்சமகாலத்திலும், விவசாயிகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பது நம் அனைவருக்கும் கடமையாகிறது.
எனவே, அரசாங்கம் உடனடியாக நெல் கொள்வனவு விலையை அறிவித்து, கொள்வனவை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதோடு, இது சம்மந்தமாக அனைத்து அரசியல் சக்திகளும் சிவில் அமைப்புகளும் பாராளுமன்றம், DCC கூட்டங்களிலும் , பொது வெளியிலும் பேசுமாறும் தயவுடன் வேண்டிக் கொள்வதாக INCLUDE அமைப்பு தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
for INCLUDE
contact@includelk.com

No comments: