மூத்த ஊடகவியலாளர் ஆர்.பாரதியின் இழப்பு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும் - எஸ்.எம்.அறூஸ் அனுதாப அறிக்கை
(எஸ்.எம்.அறூஸ்)
வீரகேசரி பத்திரிகையின் யாழ்.பிராந்திய பொறுப்பாசிரியரும் தினக்குரல் பத்திரிகை வார வெளியீட்டின் முன்னாள் பொறுப்பாசிரியருமான மூத்த பத்திரிகையாளர் ராஜநாயகம் பாரதி அவர்கள் இன்று காலமான செய்தி அறிந்து மிகக் கவலையடைந்தேன்.
வீரகேசரிப் பத்திரிகையின் வாரவெளியீட்டின் முன்னாள் பிரதம ஆசிரியர் தேவராஜாவுக்கும், பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் எப்போதும் நெருக்கம் இருந்ததில்லை. கர்வம் பிடித்தவர்போல தேவராஜா நடந்து கொள்வார். ஆனால் இதற்கு எதிர்மாறாக தினக்குரல் பத்திரிகை வார வெளியீட்டின் முன்னாள் பொறுப்பாசிரியர் ஆர்.பாரதி அவர்கள் இருந்தார்.
வாரா வாரம் தினக்குரல் பத்திரிகை வார வெளியீட்டில் அரசியல் கட்டுரை எழுத வேண்டும் என்பதற்காக பாரதி ஐயாவிற்கு தொலைபேசி அழைப்பை எடுத்து எனது விருப்பத்தை தெரிவித்தேன். உடனே எந்தவித மறுப்பையும் தெரிவிக்காது வாய்ப்பைத் தந்தார்.
அன்றிலிருந்து வாரா வாரம் தொடர்ந்தும் அரசியல் கட்டுரை எழுத ஆரம்பித்தேன்.
நாம் தினக்குரலில் அரசியல் கட்டுரை எழுதுவதை விரும்பாத நமது பிராந்தியத்தின் பொறாமை பிடித்த சில செய்தியாளர்கள் நான் வீரகேசரிப் பத்திரிகையில் அட்டாளைச்சேனை செய்தியாளராக இருப்பதாகவும் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கக்கூடாது என்றும் பாரதி ஐயாவுக்கு தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும் அழுத்தங்களைக் கொடுத்த போதிலும், அவற்றையெல்லாம் கணக்கில் எடுக்காமல் தொடர்ந்தும் வாய்ப்பினைத் தந்தார். அன்றிலிருந்து சேனையூரான் என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கினேன்.
உங்கள் எழுத்தின் ஊடாக உங்களை பலரும் சிலாகித்துப் பேசுவதை விரும்பாத அரைகுறை செய்தியாளர்களின் செயற்பாட்டை நினைத்து கவலைப்படுவதாகச் சொன்னார்.
தினக்குரல் பத்திரிகை காரியாலயத்திற்கு நான் செல்லும்போதல்லாம் இன்முகத்தோடு வரவேற்று பல விடயங்களையும் பகிர்ந்து கொள்வார். அவ்வாறான ஊடக ஆளுமையின் இழப்பு ஊடக சமூகத்திற்கு பேரிழப்பாகும்.
இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கி அவர்களை வழிப்படுத்தி சமூகத்திற்கு வழிகாட்டுபவர்களாக ஆக்க வேண்டும் என்ற பெரும் அவா கொண்டு செயற்பட்டவர் மறைந்த ஆர்.பாரதி அவர்களாகும்.
மூத்த ஊடகவியலாளர் ஆர்.பாரதியின் இழப்பு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும் - எஸ்.எம்.அறூஸ் அனுதாப அறிக்கை
Reviewed by Admin
on
February 10, 2025
Rating:

No comments: